தொலைநோக்குச் சிந்தனைகளால் நாட்டை முன்னேறச் செய்கிறது பாஜக
தொலைநோக்குச் சிந்தனைகளால் நாட்டை தொடர்ந்து முன்னேற்றும் அரசாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது என்றார் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன்.
அரியலூரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, 2016-17-ஆம் ஆண்டில் 27 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்த பிரீமியம் செலுத்தி,அதிக பயிர்க் காப்பீடு பெறும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பிருந்த நிபந்தனை தளர்த்தி, தற்போது 33 சதம் பயிர் சேதமடைந்தாலே நஷ்டஈடு பெறலாம்.
நாட்டிலுள்ள 82 நிலக்கரிச் சுரங்கங்களை நேர்மையாக ஏலமிட்டதன் மூலம் ரூ. 3 லட்சத்து 94 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு பெற்றுள்ளது. மேலும் நேரடியாக மானியம் வழங்கியதால் ரூ. 49,560 கோடி மிச்சமாகியுள்ளது. 7 கோடியே 50 லட்சம் பேருக்கு முத்ரா கடன் திட்டம் மூலம் சிறு, குறுதொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. அதே போல, தமிழக அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசும் ஒத்துழைக்கிறது.
ஓபிஎஸ் அணிக்கு தாவாமலிருக்க கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுப்பட்டதாக தனியார் டிவியில் தகவல் வெளியான விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இல. கணேசன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பொது மேலாளர் பீட்டர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். துணைப் பொது மேலாளர் மணி, செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் சு. நடராஜன் வரவேற்றார். பொதுச் செயலர் பழனிசாமி நன்றி கூறினார்.