/

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கக் கூடாது: ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கக்கூடாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

News image
புதுகையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி. ராமகிருஷ்ணன் (நடுவில்)
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கக்கூடாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
புதுகையில் புதன்கிழமை அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வர்தா புயல் நிவாரணம் வழங்காதது உள்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கக் கூடாது. நாடு முழுவதும் சாகுபடிக்காக வாங்கியுள்ள கடனை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிப்படி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை நிறைவேற்ற மோடி அரசு முன்வரவில்லை.
சாதி,ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணக்குழு வரும் 23 ஆம் தேதி சென்னைக்கு வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. பதவிக்காலம் முடிந்தும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நடப்பு கூட்டத் தொடரிலாவது லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவர மாநில அரசு முயற்சிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.
இதில், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.