தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அ.தி.மு.க.வில் பிளவு இல்லை: மு.தம்பிதுரை

அ.தி.மு.க.வில் எவ்வித பிளவும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.

News image
Updated On :20 ஜூன் 2017, 8:32 pm

அ.தி.மு.க.வில் எவ்வித பிளவும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியது:
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவரிடம் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசவில்லை. கட்சிக்குள் அணிகள் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தமிழகத்தில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது. கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களால் காக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்போம். ஆட்சி முழுமைக்கும் அதிமுக அரசு பதவி வகிக்கும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை. இதுகுறித்து பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறார் என்றார்.
சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு: தம்பிதுரையைத் தொடர்ந்து அதிமுக துணைப் பொதுச் செய்லாளர் டிடிவி தினகரன், அவரது மனைவி அனுராதா ஆகியோர் சிறையில் சசிகலாவைச் சந்தித்தனர். அவர்களுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, கென்னடி, பழனியப்பன்,முருகன் உள்ளிட்டோர் சென்றனர்.
சிறையில் சசிகலாவைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் தினகரன் கூறியது: சென்னையில் இருக்கும் போதெல்லாம் சசிகலாவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். கடந்த முறை பெங்களூரு வந்த போது எனது சகோதரர் சுதாகரனைச் சந்தித்தேன்.
இம்முறை எனது சித்தியைச் சந்திக்க வந்தேன். அவரிடம் அரசியல், குடியரசுத் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. எனது குடும்பத்தினர் 2 அணியாக பிரிந்துள்ளதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். குடும்பத்தினர் அனைவரும் உறவினர்களாக ஒற்றுமையாக உள்ளோம்.
குடியரசுத் தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உரிய முடிவை எடுப்பார். அரசியலில் எங்கள் கட்சியையும், ஆட்சியையும் பலமிழக்கச் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது வாடிக்கை.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 122 பேரும் எங்களுடன் உள்ளனர். எங்கள் கட்சியையும், ஆட்சியைக் காப்பாற்றுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.