சென்னை: வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், போராட்ட களத்தில் உள்ளவர்களை சந்திக்கும் பொருட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ராமேசுவரம் சென்றார்.
பின்னர் அவர் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசும் பொழுது, 'நாங்கள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்துவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும்' என்று தெரிவித்தார்.