/

கேட்பாரற்றுக் கிடக்கும் கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணம்

பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் (1966-ம் ஆண்டு) கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட சம சிக்கன நிதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் கேட்பாரற்றுக்கிடக்கிறது.

News image
Updated On :24 மே 2017, 4:43 am

கோ.ஜெயக்குமார்

பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் (1966-ம் ஆண்டு) கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட சம சிக்கன நிதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் கேட்பாரற்றுக்கிடக்கிறது. இதனை கைத்தறி நெவாளர்களின் நலனுக்கு அரசு பயன்படுத்த வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக 1966-ம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் சம சிக்கன நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இத் திட்டத்தில் சேர்ந்துள்ள உறு்பபினர்கள் பெறும் நெசவுக் கூலியில் 6 சதவீதம் பங்கு உறுப்பினரும், தமிழக அரசு 4 சதவீத பங்கும், சம்பந்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கம் 2 சதவீதம் பங்கும் அந்ததந்த சங்கங்கள் உள்ள மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஈட்டு வைப்பாக செலுத்தப்பட்டு, அதற்கான வட்டி மத்திய வங்கி வழங்கி வந்தது. இத் தொகை முழுவதும் உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

இத் திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் 55 வயது பூர்த்தியானதும், உறுப்பினர் பெயரில் உள்ள ஈட்டு வைப்புத் தொகை வட்டியுடன் உறுப்பினர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு வந்தது. அதாவது உறுப்பினர் பங்கு 6 சதவீதம், அரசு பங்கு 4 சதவீதம், சங்கம் பங்கு 2 சதவீதமும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது.

இத் திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் 55 வயதிற்கு முன் இறந்து விட்டால், அவரது வாரிசுதாரருக்கு அதே போல் முழுத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இத் திட்டத்திலிருந்து 55 வயதிற்குட்பட்டு விலகிய உறுப்பினர்களின் திட்டத் தொகையில் அரசு பங்கில் 50 சதவீதமும் அதன் வட்டியில் 50 சதவீதமும், சங்கம் பங்கில் 50 சதவீதமும் அதன் வட்டியில் 50 சதவீதமும் பறிமுதல் செய்யப்பட்டு நெசவாளர்களின் நலனுக்காக பயன்படுத்த தனியாக ஒதுக்கீடு செய்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலேயே ஈட்டு வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் தொகைக்கு சம்பந்தப்பட்ட வங்கி வட்டி கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். ஆனால் யாரும் கேட்கப்படாமல் உள்ளதினால் வட்டி சேர்க்கப்படாமல் உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உதவி கைத்தறி இயக்குநர் சரகத்திற்குட்பட்ட தொகை மட்டும் ரூ.1,04,086 ஆகும். 

கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தனித் துறையாக தமிழக அரசு கைத்தறித் துறை என்று ஒரு துறையை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் கடந்த 50 ஆண்டு காலமாக இத்தொகை எந்த ஒரு நெசவாளர்க்கும் பயன்படாமல் கேட்பாரற்று உள்ளது நெசவாளர்கள் மத்தியில் வேதனையை அளிக்கிறது.

சம சிக்கன நிதி திட்டத்திற்குப் பதிலாக 15.11.1975-ல் நெவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்திலுள்ள தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது. 

நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் இயற்கை எய்தினால், ஈமச்சடங்கு செலவிற்கு ரூ.2 ஆயிரம் சங்க நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டும், நெசவாளர் சங்கங்களில் பல நஷ்டம் அடைந்துள்ளதினால் ஈமச்சடங்கு செலவுத் தொகை பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. சில சங்கங்களில் ஈமச்சடங்குத் தொகை வழங்கப்படுவதேயில்லை.

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். நெசவாளர் கல்வி அறக்கட்டளையிலிருந்து நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி கற்க கல்வி உதவித் தொகையும் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. 

நெசவாளர் கூட்டுறவு சங்கத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் நலத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் சம சிக்கன நிதி திட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெற்று தனியாக ஒரு நிதியமைப்பு ஏற்படுத்தி நெசவாளர்கள் பயனடையச் செய்ய நெசவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.