சூர்யா உள்ளிட்ட எட்டு நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! 

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சூர்யா உள்ளிட்ட எட்டு நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூர்யா உள்ளிட்ட எட்டு நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! 
Published on
Updated on
2 min read

சென்னை: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சூர்யா உள்ளிட்ட எட்டு நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு தமிழ் நாளிதழில் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி திரைப்பட நடிகைகள் குறித்த ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆட்சேபத்தையடுத்து, அச்செய்திக்கு அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பத்திரிகை மீது கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுதொடர்பாக, உதகையைச் சேர்ந்த ரொசாரியா என்பவர், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்று கூறி அவதூறு வழக்குத் தொடுத்தார்.

அதற்காக நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, இயக்குநர் சேரன், விவேக், அருண் விஜய், விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது தனியார் முறையீட்டின்கீழ், 2009-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் வழக்குரைஞர்கள் விஜயன், செந்தில்குமார், பிச்சையம்மாள் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

மே 15-ஆம் தேதி நடிகர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, உதகை நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ராஜவேலு, இவர்கள் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடியாணை பிறப்பித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். மேலும், உதகை நீதிமன்றத்தில் ஜூன் 17-ஆம் தேதி நடிகர்கள் 8 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

தங்கள் மீதான பிடியாணையை ரத்து செய்யக்கோரி சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். நடிகர்களின் சார்பில் வழக்கறிஞர் விஸ்வநாதன் உதகை நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பிடியாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களும் ஜூன் 17-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் உதகை நீதிமன்ற நீதிபதியின் ஆணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com