சென்னை: மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி உணவு உண்ணும் திருவிழாவில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 1960ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் இடது சாரிகள் ஆட்சி நடக்கும் கேரள மாநில முதல்வர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கேராளாவில் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாட்டிறைச்சி உணவு உண்ணும் போராட்டங்களை நடத்தின.
தமிழகத்திலும் இன்று சென்னை,மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் மானார் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் சிலர் மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாட்டிறைச்சி உணவு உண்ணும் திருவிழாவில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது
சென்னை ஐஐடி வளாகத்தில் 80-க்கும்மேற்பட்ட மாணவர்கள் ஞாயிறு இரவு ஒன்று கூடினர். குறிப்பிட்ட எந்த மாணவர் அமைப்பையும் சேராத அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பிரட் மற்றும் மாட்டுக் கறி ஆகியவற்றை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். மத்திய அரசின் உத்தரவை 'உணவு சர்வாதிகாரம்' என்று வர்ணித்த அவர்கள், அதற்கு நேர்மறையான விதத்தில் எதிர்ப்பு காட்டுவதற்காகவே தாங்கள் இதில் ஈடுபட்டதாக கூறினார்.
இந்த போராட்டம் நடத்துவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் அனுமதி பெறத் தேவை இல்லை என்று கூறிய அவர்கள் ஆனால் இதைப்பற்றி முறைப்படி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளனர்.