சென்னை: மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிராக சென்னையில் நாளை மறுநாள் திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 1960ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் இடது சாரிகள் ஆட்சி நடக்கும் கேரள மாநில முதல்வர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்தன.
தமிழகத்திலும் இன்று சென்னை,மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிராக சென்னையில் நாளை மறுநாள் திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பின்படி நாளை மறுநாள் 31-ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே காலை 9 மணிக்கு திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும். போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை தங்குவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.