/

மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு: ஐஐடி மாணவர் மீது தாக்குதல்

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி, விமான தொழில்நுட்பத் துறை (ஏரோஸ்பேஸ்) ஆராய்ச்சி மாணவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News image
தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்.
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி, விமான தொழில்நுட்பத் துறை (ஏரோஸ்பேஸ்) ஆராய்ச்சி மாணவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாட்டுச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தும், இறைச்சிக்காக பசுக்கள், ஒட்டகங்கள் கொல்லப்படுவதற்கு தடை விதித்தும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு கேரளம், கர்நாடகம், மேற் குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுபோல், சென்னை ஐஐடியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மத்திய அரசின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதைப் பதிவு செய்யும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஐடி வளாகத்திலேயே மாட்டிறைச்சி விருந்துக்கும் ஏற்பாடு செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி சென்னை ஐஐடி-யில் ஏரோஸ்பேஸ் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் ஆர். சூரஜ் என்ற மாணவர், அதே வளாகத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வலது கண், கைகளில் பலத்த காயமடைந்த சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே, விருந்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு, சில மாணவர்கள் நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஐஐடி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், மாணவர் சூரஜை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையை ஐஐடி நிர்வாகம் எடுக்க வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.