

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏற்கெனவே டெங்கு பாதிப்பு பரவியுள்ளது. இதனால் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜஹான், சத்யேந்திர சிங் துர்சாவத், அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முதலவில் உழவர்கரை நகராட்சியில் உள்ள பாவாணர் நகர், பூமியன்பேட்டை பகுதியில் வீட்டு வசதி, குடிச மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். அங்கிருந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என புகார் செய்தனர். அதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி விரைவில் இலவச அரிசி தரப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்ற காரணமாக மத்திய அரசு மண்ணெண்ணையை ஒதுக்கீடு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது பொதுமக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கடும் சிரமமாக உள்ளது. குறைந்தது 1 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் எனக்கேட்டனர். குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் அதற்கு வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு கடந்த 1983-ல் கட்டப்பட்ட குடியிருப்புகள், 800 வீடுகள் உள்ளன. எங்களுக்கு பொது கழிப்பிடம் தான் உள்ளது. தனி நபர் கழிப்பறைகள் இல்லை. மழைக்காலத்தில் குடியிருப்பைச் சுற்றியுள்ள வாய்க்கால்களில் நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு உள்ளது. விஷ ஜந்துக்கள் வீடுகளில் நுழைந்து விடுகின்றன. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இடியும் நிலையில் உள்ளது எனத் தெரிவித்தனர். அவற்றை புனரமைக்க ரூ.1.65 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்ப்டடுள்ளது. அனைவரும் ஒத்துழைத்தால் இடித்து விட்டு புதிதாக கட்டித்தப்படும். குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்காதவாறு ஏற்பாடு செய்யப்படும். மழைக்காலம் முடிந்த பின் இப்பணிகள் முடிக்கப்படும்.
பின்னர் பிள்ளைத்தோட்டம் பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அங்கே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜஹான் ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். பின்னர் எழில் நகர் நோக்கி முதல்வர் தலைமையிலான குழுவினர் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.