சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 48 மணி நேரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்து நடவடிக்கைகளயும் துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மழை நிவாரண நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆர்.கே. நகர், பழைய வண்ணாரப்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் பள்ளிக்கரணையில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசியதாவது:
சென்னையில் கடந்த 2 தினங்களுக்கும் மேல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அகற்றினர். போர்கால அடிப்படையில் மழையால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்யப்படுகிறது.
31 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏரிகள் தூர்வாரப்பட்டு இருப்பதால் மழை நீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும். மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது என்றார்.