இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை அமைப்பு நடத்திய குத்துச் சண்டை போட்டியில், தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற சென்னைப் பள்ளி மாணவி சரண்யாவுக்கு (வயது 14) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் .தா.கார்த்திகேயன் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புத்தா தெரு, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி சரண்யா (வயது 14), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் (சப் ஜூனியர் பெண்கள் பிரிவு) மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் அனுமதியுடன் குத்துச் சண்டை பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.
இவர், இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை அமைப்பின் மூலம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் நடத்தப்பட்ட 8-ஆவது தேசிய குத்துச் சண்டை சாம்பியன் சப்-ஜூனியர் போட்டியில் பி-6 எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். அதையடுத்து மாணவி சரண்யா, தனது தாயார் மற்றும் தலைமையாசிரியருடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது ஆணையாளர் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து, புத்தகம் பரிசளித்தார்.
துணை ஆணையாளர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், பள்ளித் தலைமையாசிரியை எம்.சிவகாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.