சென்னை: அதிமுக கட்சி அலுவலகத்தில் டிடிவி தினகரனை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்கும் கூட்டம் அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்.19) பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை தினகரன் எம்எல்ஏ கூட்டத்தை கூட்ட உள்ளது குறித்து மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், செங்கோட்டையன் மற்றும் சி.வி. சண்முகம் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட டிடிவி தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுக விதிப்படி தலைமை நிலைய செயலரே எம்எல்ஏ கூட்டத்தை கூட்டும் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக கட்சி அலுவலகத்தில் டிடிவி தினகரனை அனுமதிக்கமாட்டோம். கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஏற்க முடியாது.
கட்சியையும், சின்னத்தையும் மீட்பதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.