

சென்னை: செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரே ரயிலில் செல்லலாம் என்று சொன்னால், சும்மா நக்கலடிக்காதீர்கள் என்று சொல்பவர்களுக்காக வந்துவிட்டது புதிய ரயில் சேவை.
வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து தெற்கு புறநகர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் புதிதாக 4 இணைப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வார நாட்களில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வழியாக, கும்மிடிப்பூண்டிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படும். வார இறுதி நாட்களில் இயக்கப்பட மாட்டாது.
காலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து ரயில் புறப்பட்டு, 9.50 மணிக்கு செங்கல்பட்டை அடையும். அதே ரயில் செங்கல்பட்டில் இருந்து 10.30க்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டியை 1.55க்கு வந்தடையும்.
அடுத்து, கும்மிடிப்பூண்டியில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 4.55 மணிக்கும், அடுத்த ரயில் 6.05க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கும்மிடிப்பூண்டியை இரவு 8.40 மணிக்கும் வந்தடையும்.
இந்த ரயில் சேவை வரும் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை, கும்மிடிப்பூண்டி மார்கத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தும்.
இதன் மூலம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ரயிலில் வந்து சென்னை சென்டிரலில் இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்தில் தாம்பரத்துக்கு ரயில் பிடிக்க ஓடும் பயணிகள் எண்ணிக்கையும் இனி நிச்சயம் குறையும்.
இது குறித்து பேசிய மூத்த ரயில்வே அதிகாரி, சென்னை சென்டிரலில் காலை வேளையில் ஏற்படும் மிகப்பெரிய கூட்ட நெரிசல் இதன் மூலம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் 151 ரயில்களில் 3.92 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 224 ரயில்சேவைகளில் சுமார் 5.55 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.