

பாலியல் பேர வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், ஆராய்ச்சி மாணவரும், தற்காலிக ஆசிரியருமான கருப்பசாமியை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், இருவரிடமும் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் சாத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். ஆனால், நீதித்துறை நடுவர் விடுமுறை என்பதால், பொறுப்பு நீதித்துறை நடுவரான ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-க்கு இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
போலீஸார், நீதித்துறை நடுவர் பரமசிவம் வீட்டில் இருவரையும் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, இருவரையும் மே 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும், அதுவரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். ஆனால், இருவரும் தங்களை விருதுநகரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், இருவரையும் விருதுநகர் மாவட்டச் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.