திருச்சி பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு கடந்த 2016-இல் இருந்து அரசின் இலவச நாப்கின்கள் வழங்கப்படாத விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் திருச்சியில் உள்ள பெண்கள் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 27) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழக அரசின் இலவச நாப்கின்கள் வழங்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் கேட்டபோது, சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறைதான் இலவச நாப்கின்களை வழங்கி வந்தது. ஆனால், திடீரென நாப்கின்கள் வழங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அழைப்பாணை: தமிழக அரசு சார்பில் திருச்சி பெண்கள் சிறைக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த நாப்கின்களை நிறுத்தியது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரும், திருச்சி மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநரும் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மே 15-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஏடிஜிபிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்: திருச்சி பெண்கள் சிறையில் நாப்கின்கள் வழங்கப்படாததற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், தமிழகத்தின் மற்ற பெண்கள் சிறையில் இலவச நாப்கின்கள் வழங்கப்படுவதன் நிலை குறித்தும் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிறைத் துறை ஏடிஜிபிக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டார்.