விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள உணவகத்தின் காசாளர் பிரகாஷ் (37), கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் வேலை நேரம் முடிவடைந்த பின்னர், வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பல், பிரகாஷிடம் இலவசமாக பிரியாணி கேட்டது. அப்போது பிரகாஷ், பிரியாணி காலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அந்தக் கும்பல், பிரகாஷிடம் தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிரகாஷை தாக்கினர். இதைத் தடுக்க வந்த அந்தக் கடை ஊழியர்கள் கருணாநிதி, நாகராஜ் உள்பட 3 பேரை, அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த பிரகாஷ், கருணாநிதி, நாகராஜ் உள்பட 4 ஊழியர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அந்த பிரியாணி கடை நிர்வாகம் சார்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.