காலத்தை வென்று நிற்பார் கலைஞர்! கவிஞர் வைரமுத்து இரங்கல்!

இனி இல்லை என்பது தமிழர்களுக்கு பெரும் இழப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காலத்தை வென்று நிற்பார் கலைஞர்! கவிஞர் வைரமுத்து இரங்கல்!


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு நெருக்கமான கவிஞர்களில் ஒருவர் வைரமுத்து. தனது குடும்பத்துடன் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவர், தலைவரின் உடலை நேரில் பார்த்ததும் கதறி அழுது விட்டார். கருணாநிதியின் உடலை சற்று தூரத்தில் பார்த்ததுமே அவர் துயரில் அழத் துவங்கிவிட்டார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையைத் தொட்டு அழுதார் வைரமுத்து. கருணாநிதியின் உடல் அருகேயிருந்த ஸ்டாலினைக் கண்டதும் அவரை அணைத்து அழுதார்.  

தலைவர் கலைஞர் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: 'கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்க முடியும் என்றால் அதன் பெயர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்து அளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார். வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார். எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், கட்சித் தலைவர், ஆட்சித் தலைவர், உறங்காத படைப்பாளி, ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும். தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார். மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன்’என்று இரங்கல் தெரிவித்திருந்தார்.

சிறந்த எழுத்தாளரான கலைஞர் கருணாநிதி நினைவுடன் இருந்த காலம் வரை எழுதாத நாள் என ஒன்று இருந்ததில்லை. உடன்பிறப்புகளுக்கு கடிதம், எதிர்க்கட்சியினருக்குப் பதில் அறிக்கை என எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தவர். தென்பாண்டிச் சிங்கம்', பொன்னர் சங்கர்' உள்ளிட்ட 6 சரித்திர நாவல்களுடன் பத்துக்கும் மேற்பட்ட சமூக நாவல்களையும் எழுதியுள்ளார். பழனியப்பன்', நச்சுக்கோப்பை', உதயசூரியன்', தூக்குமேடை' உள்பட 21 நாடகங்கள் எழுதியுள்ளார். அரும்பு', குப்பைத்தொட்டி', சாரப்பள்ளம் சாமுண்டி' உள்பட 37 சிறுகதைகள் எழுதியுள்ளார். தொல்காப்பியம், திருக்குறள் போன்றவைக்கு உரை எழுதியுள்ளார். கருணாநிதி தன்னுடைய சுயசரிதையை நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் 6 பாகங்களாக எழுதியுள்ளார். இனியவை இருபது' என்ற பயணநூலையும் எழுதியுள்ளார். கருணாநிதியின் கவிதை நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இயல் இசை நாடகம் என முத்தமிழில் கோலோச்சியவர் இனி இல்லை என்பது தமிழர்களுக்கு பெரும் இழப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com