/

கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2018, 12:44 pm

DIN

வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை. 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' என்ற பெயரில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 17-ஆம் தேதி திருச்சியில் 'கருத்துரிமை காத்தவர் கலைஞர்' என்ற தலைப்பில் ஊடகத் துறையினரும், 19-ஆம் தேதி மதுரையில் ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்' என்ற தலைப்பில் இலக்கியத் துறையினரும் பங்கேற்ற கூட்டம் நடந்தது. 

25-ஆம் தேதி கோவையில் 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற தலைப்பில் கலைத்துறையினர் என்ற தலைப்பில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடைபெற்றது. 

இந்த கூட்டங்களின் நிறைவாக வரும் 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. 

அந்த கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுத்திருந்தது. இதில், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல இருப்பதால் பங்கேற்க முடியாது என்ற தகவல்கள் வெளியானது. அதேசமயம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 

திமுக சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் அமித் ஷா பங்கேற்கிறார் என்ற முதலில் செய்தி வெளியானது. இதையடுத்து, அமித் ஷா இதில் பங்கேற்பது தேர்தல் கூட்டணிக்கான தொடக்கம் என்கிற வகையில் அது தமிழகத்தின் விவாத தலைப்பாக மாறியது.   

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், 'திமுக கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என்று அமித் ஷா எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சியளிக்கிறது' என்று பதிவிட்டார். 

இதனால், கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் - அமித் ஷா விவகாரம் உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே தமிழகத்தில் தொடர்ந்து விவாதமாக நீடித்து வந்தது. தமிழக பாஜக தலைவர்களிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது அமித் ஷா வருகை குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றனர். 

இந்நிலையில், 30-ஆம் தேதி நடைபெறும் கருணாநிதியின் நினைவஞ்சலி கூட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் கலந்துகொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.