பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

News image
Updated On :6 டிசம்பர் 2018, 7:33 am

DIN



பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

இன்று வியாழக்கிழமை (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றன.  இதையொட்டி, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், அனைத்துப் பயணிகளிடமும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர சோதனை நடத்திய பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

 ரயில் நிலைய நடைமேடைகளில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வரும் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூடும் இடங்கள், வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, அரசு அலுவலகங்கள், ஆன்மிக தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாடகை வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, நகரின் முக்கிய சாலைகளிலும் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கை தீவிரப்பட்டுள்ளதுடன், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகரில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். 

கோவை விமான நிலையத்தைச் சுற்றிலும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கோவை, வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் பிரதான நுழைவுவாயில், பின்புற நுழைவுவாயில்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியுடன் ரயில்வே போலீஸார் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுக் கூடங்கள் அனைத்திலும் காவல் துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. 

சாலையில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் நடவடிக்கைகள் தெரியவந்தால் பொதுமக்கள் அது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.