முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்!

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், எழுத்தாளரும், மூத்த தமிழறிஞருமான க.ப. அறவாணன்(77)
முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்!


சென்னை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், எழுத்தாளரும், மூத்த தமிழறிஞருமான க.ப. அறவாணன்(77) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம் கடலங்குடியில் பழநியப்பன்-தங்கப்பாப்பு தம்பதியினருக்கு 09.08.1941 இல் மகனாக பிறந்தவர் பேராசிரியர் க.ப. அறவாணன். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும், அருணாசலம் எனவும் அமைந்திருந்தன. பின்னாளில் அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். பிறந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றவர். அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற ஊரில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும்(1959), பி.ஒ.எல் பட்டமும்(1963) பெற்றார். முதுகலைப் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில்(1965-1967) பயின்றார். 

21.04.1969 இல் பேராசிரியர் தாயம்மாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இவர்களின் இல்லறப் பயனாய் அறிவாளன், அருள்செங்கோர் என்னும் இரு மக்கட்செல்வங்களைப் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றார். பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் (1970). தென்னாப்பிரிக்கா - செனகால் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக 1977-82 வரை பணிபுரிந்தவர், 1982 முதல் 1987 வரை சென்னை இலயோலா கல்லூரியிலும், 1987 முதல் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 

பின்னர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998-2001 வரை துணைவேந்தராகப் பணிபுரிந்தார். இவர்தம் பணிக்காலத்தில் சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெருமைக்குரியவர்.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தொய்வுற்று இருந்த நிலையில் அதனை மிகப்பெரிய நிலைக்கு உயர்த்தி, தமிழாய்வுகள் சிறக்க வழிசெய்தவர். அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர். அவர்களின் வழியில் கடுமையாக உழைத்து வாழ்வின் உயர்நிலையை அடைந்தவர். அறுபதிற்கும் மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டவர். 

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினரான இவர்  சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் என்பன இவர் பங்களித்துள்ள துறைகளாகும். தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், கவிதைகிழக்கும் மேற்கும், அற்றைய நாள் காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாயவரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்பு நூல்களாக "அவள் அவன் அது", "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்", "செதுக்காத சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", நல்லவங்க இன்னும் இருக்காங்க, கண்ணீரில் மிதக்கும் கதைகள், என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். கடந்த 1986 ஆம் ஆண்டில் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதும் பெற்றுள்ளார். இவர் ஆசிரியராக இருந்து பல இதழ்களையும் வெளியிட்டு உள்ளார். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ், தமிழர் குறித்து உரையாற்றிய சிறப்பிற்குரியவர்.

தமிழ் எழுத்தாளரான இவர், இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் பொருளாளரும் இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.

மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான க.ப. அறவாணன், நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று 23.12.2018 (ஞாயிறு) விடியற்காலை 5 மணியளவில் சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது. 

அறவாணன் மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நவீனத் தமிழுக்கு தமிழறிஞர் க.ப.அறவாணன் செய்த தொண்டு அளப்பரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழர் முன்னேற்றம் குறித்தே நாளும் சிந்தித்த பெருந்தகை அறவாணன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.  

தமிழ் எழுத்துக்களில் ஆர்வம் கொண்ட இவர், எழுத்தாளர்களை சிறப்பிக்க ஆண்டு தோறும் அறவாணர் என்ற விருதை சான்றோர்களுக்கு வழங்கியவர். தமிழ் நிகழ்ச்சிகளில் வெள்ளை ஆடைகள், தொப்பி என வித்தியாசமான தோற்றத்துடன் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com