ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழவெண்மணி கிராமத்தில், வெண்மணி தியாகிகளின் 50 -ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேளை உணவுக்குக்கூட மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் செயல்பாடு என்பது அரசு இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் மீதான வெறுப்பைத் தவிர்த்து, மனசாட்சியுடன் தமிழகம் கோரியுள்ள புயல் இழப்பீட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
நுண்கடன் நிதி நிறுவனத்தினர் கிராமங்களுக்குச் சென்று அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பொதுமக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள விவசாயக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வலியுறுத்தி, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட ஆட்சியரகங்களின் முன்பாக ஜனவரி 2 முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்துகொள்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
தமிழகத்தை ஆளும் எடிப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, ஆட்சி நடத்துவதற்கு தகுதியற்றதாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கின்ற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பில்லை. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் எச். ராஜா போன்றவர்கள் பாஜகவில் இருக்கும் வரை அக்கட்சி தமிழகத்தில் வளராது. இந்தி மொழி தெரிந்திருந்தால்தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்களாகச் சேர முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், எதிர்வரும் காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர முடியாது என்றார் அவர்.
பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







