திருச்சியில் கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணை சிபிசிபிஐடிக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை அறிக்கைகள் அனைத்தையும் மாநகரப் போலீஸார் சிபிசிஐடி வசம் சமர்பித்துள்ளனர்.
திருச்சி விடுதி ஒன்றில் தங்கியிருந்த சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய தலைமைக் காவலர் பரமேஸ்வரன், அவரது நண்பர்கள் சென்னையைச் சேர்ந்த நாகராஜ், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் சிவா ஆகிய மூவரும் ஜனவரி 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ளத் துப்பாக்கிகள் , தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், நெல்லையைச் சேர்ந்த தனசேகர், எட்டப்பன், சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், சென்னையிலும் இதேபோன்ற சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு சம்பவங்கள் தொடர்பான இரு வழக்குகளையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை திருச்சி மாநகர போலீஸார் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள், தொடர்புடைய பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவற்றை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.