பூக்கள் விலை குறைந்தன: கிலோ ரூ.3000-க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.450

மதுரையில் கடந்த வாரம் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிலோ ரூ. 450-ஆகக் குறைந்தது.
பூக்கள் விலை குறைந்தன: கிலோ ரூ.3000-க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.450
Updated on
1 min read

மதுரையில் கடந்த வாரம் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிலோ ரூ. 450-ஆகக் குறைந்தது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் முகூர்த்த நாள்கள் அதிகமாக இருந்ததால், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்திருந்தது. எனவே, கடந்த வாரம் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.3,500-க்கு விற்கப்பட்டது. இதேபோல், முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,800-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விலை குறைந்து காணப்படுகிறது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மல்லிகைப் பூ கிலோ ரூ.450-க்கும், முல்லை கிலோ ரூ.600-க்கும், பிச்சி ரூ.550, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.500, ரோஜா கிலோ ரூ.100-க்கும் விற்கப்பட்டது.

பனிக் காலம் முடிந்திருப்பதால் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். எனவே, அடுத்தடுத்த வாரங்களில் பூக்கள் வரத்து அதிகரித்து விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவராத்திரி பூஜை நெருங்குவதால் பூக்கள் விலையில் சிறு ஏற்றம் இருக்கும் என்றும், அதையடுத்த நாள்களில் பூக்களின் விலை குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த 3 நாள்களில் மட்டும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப் பூவின் வரத்து நாளொன்றுக்கு குறைந்தது 2 டன் வீதம் இருந்தது. மதுரையைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மல்லிகைப் பூவின் வரத்து இருப்பதால், அடுத்த சில நாள்களில் விலை மேலும் குறையும் எனவும் அவர்கள் கூறினர்.

காய்கறி விலை நிலவரம்:
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காயை தவிர பிற காய்களின் விலை உயர்ந்துள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து காய்கறி விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஒசூர், தருமபுரி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால், அதன் விலை மட்டும் குறைந்து காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில், கடந்த வாரம் கிலோ ரூ.7-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.5-க்கும், கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்ட உருளை கிலோ ரூ.20-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.35-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.15-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com