மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில், அம்ருதா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஜெ.தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரது சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜெ.தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்த பொய் வழக்கை அம்ருதா, ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் தொடர்ந்துள்ளார்.
எனது தந்தை ஜெயக்குமாரும், அத்தை ஜெயலலிதாவும் மட்டுமே எனது பாட்டி சந்தியாவின் வாரிசுகள்.
எனவே அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஏற்கெனவே தீபக் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.