கரூர் அருகே, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் பெண் உயிரிழந்தார். மேலும் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகிளிப்பட்டியிலிருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பாத யாத்திரையாக புதன்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் குழுவாக கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை மணத்தட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் திடீரென நிலைத்தடுமாறி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில், கார் மோதியதில் முருகானந்தம் மனைவி விஜயா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், மகளிப்பட்டி கோபாலகிருஷ்ணன் (52), இந்திராணி (35), சிறும்பாயி(35), போதும்பொண்ணு (50), அவரது மகள் பிரியா (22), ரேவதி (30), சகுந்தலா (40), பிச்சையம்மாள்(55) உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதியினர் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் குளித்தலை கடம்பர்கோயிலைச் சேர்ந்த ராமசாமி மகன் சரவணக்குமாரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.