நமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல: ரசிகர்கள் மத்தியில் கமல்!

நமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல; மக்களின் முன்னேற்றத்தினை நோக்கியது என்று செவ்வாயன்று தனது  ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.
நமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல: ரசிகர்கள் மத்தியில் கமல்!
Published on
Updated on
1 min read

சென்னை: நமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல; மக்களின் முன்னேற்றத்தினை நோக்கியது என்று செவ்வாயன்று தனது  ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.

எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தினை துவக்க உள்ளதாகவும், அன்றே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல் முன்னதாக வார இதழ் ஒன்றில் தான் எழுதி வரும் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக திங்கள் முதல் அவர் மாவட்ட வாரியாக தனது நற்பணி மன்றத்தினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  முதலில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

செவ்வாயன்று தேனி, சிவகாசி, தஞ்சாவூர் உள்ளிட்ட 27 மாவட்ட நற்பணி மன்ற உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனைக் கூட்டம் மதியம் 3.30 மணி அளவில் நிறைவு பெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில், கமல்ஹாசன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நமது பயணம் எதை நோக்கியது என்று கேட்கிறார்கள். நமது பயணம் வெற்றியை நோக்கியது. கண்டிப்பாக நமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல. மக்களின் முன்னேற்றத்தினை நோக்கமாக கொண்டது. எனவே அதன் வீச்சும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். விரைவில் நமக்கு வெற்றி நிச்சயம்.

இங்கு வெற்றி என்பது எது? அதற்கான அளவுகோல் என்பது நீளமானது. நமது பாதையும் அதைப் போலவே நீளமானதுதான். நமது மன்றங்கள் எப்பொழுது ஜாதி, மதம் மீது நம்பிக்கை இல்லாத ஒன்று. இனிமேலும் அபப்டித்தான் இருக்கப் போகிறது. இதற்கு முன்பு நமது மன்றதது நண்பர்களை எந்த கட்சி என்று கேட்டது இல்லை. ஆனால் இனி கேட்பேன். அது உறுதி படுத்திக் கொள்வதற்காக மட்டுமே!

நம்முடைய பயணத்தில் இன்னும் நிறைய பேர் வந்து இணைந்து கொள்ளவிருகிக்கிறார்கள். அவர்கள்  அனைவருக்கும் நீங்கள் மூத்த சகோதரர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும். நமது கோஷங்களில் வெறித்தனம் இருக்கக் கூடாது. கண்ணியம் எப்பொழுதும் காக்கப்பட வேண்டும்.

நமது விரோதிகள் என்பவர்கள் சமூகத்திற்கும் விரோதிகள்தான். நமது பயணமானது விரைவாக நல்லபடியாக நடக்க வேண்டும். விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.அப்பொழுது அங்கு உங்களை நேரில் சந்திக்கிறேன்.  நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com