தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து ஆணையம் சார்பில் தூத்துக்குடி சென்று அங்கு நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27-ஆம் தேதி சென்னையில் 2-ஆம் கட்டமாக விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி இதுவரை 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலங்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். இல்லையெனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான திட்டங்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் 130 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






