
சென்னை: வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துக்களை கணக்கில் காட்டாமல் மறைத்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்கள் பற்றி முறையாக வருமான வரி கணக்கில் காட்டவில்லை என ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை ப.சிதம்பரம் மீது புகார் மனு அளித்தது.
இந்த மனுவினை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, திங்களன்று ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் திங்களன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சிதம்பரம் குடும்பத்தினர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். தமிழகத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கு என்று சிறப்பு நீதிமன்றம் எதுவும் இல்லாத நிலையில் இந்த வழக்கு நடவடிக்கை செல்லாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்காக வரும் 30ஆம் தேதி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.