சென்னை: வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100% இல் இருந்து 50% ஆக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சொத்து வரியை 50% ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது குறித்த ஒரு வழக்கு விசாரணையில் தமிழக அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், சொத்து வரியை உயர்த்துமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின்படி, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இதுவரை சொத்து வரி 50% ல் இருந்து, இனி 100% ஆக உயர்த்தப்படும். மேலும், குடியிருப்புகளுக்கு 50% ம், வாடகை குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமல் சொத்து வரி விதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. .
அதேசமயம் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100% இல் இருந்து 50% ஆக குறைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100% இல் இருந்து 50% ஆக குறைக்கப்படுகிறது.
தமிழக அரசு சொத்து வரி உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அரசாணையானது முன் தேதியிட்டு வெளியிடப்படவில்லை.
எனவே சொத்து வரியினை யாரும் முன் தேதியில் இருந்து செலுத்த வேண்டியது இல்லை.
சொத்து வரியானது 2018-19 நிதியாண்டில் முதல் பகுதியில் இருந்து செலுத்தினால் போதும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.