

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்தான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. அவரது சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் குழு அவரை கண்காணித்து வருகின்றனர்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து வியாழக்கிழமை இரவு முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அடுத்தடுத்து கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், ஏராளமான தொண்டர்கள் கோபாலபுர இல்லத்தில் கூடியுள்ளனர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதி உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்" என்றார்.
இருப்பினும், கருணாநிதியின் உடல் நலம் குறித்தான வதந்திகள் தொடர்ந்து பரவி வருகிறது. இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"கருணாநிதியின் உடல் நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கருணாநிதியை நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியை சந்திக்க வருகை தருவதை தவிர்க்க வேண்டும். விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம் - அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.