இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நெரூரைச் சேர்ந்த இளம்பெண், தனது கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இவர்களது இரு பெண் குழந்தைகளும், இளம்பெண்ணின் தாய் வீட்டில் வசித்து வந்தனர்.
இந் நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு ஓர் இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள போதகாபட்டி நாயக்கர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இருவரும் ஒடுவன்குறிச்சியில் உள்ள ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், 2015-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இருவரும் பணிமுடிந்து வீட்டுக்கு நடந்து வந்தபோது, போதகாபட்டி மயானம் அருகே 5 பேர் வழிமறித்து இளைஞரைத் தாக்கி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுதொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்த ஜெய்சூர்யா(22), அஜீத்(21), பிர்லா(25), அக்கலாம்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார் (20), நாமகிரிப்பேட்டை கிழக்கு அண்ணா காலனி ராஜேஷ் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான ஜெய்சூர்யாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.16,000 அபராதமும், மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.