சென்னையில் ஆளுநர் மாளிகைக்குப் பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் தலைமை கணக்காயர் சவரிராஜன், கிண்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் செய்த புகாரில், ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர், அலங்கார விரிப்புகள் உள்ளிட்ட பொருள்கள் கடந்த 2015 பிப்ரவரி முதல் 2017 வரை வாங்கியதில் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும் போலி பில்களைக் கொடுத்து பண மோசடியில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், ஆளுநர் மாளிகைக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பர்னிச்சர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்கும் அடையாறு வெங்கடரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் முகமது யூனுஸ் சேட்டுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் முகமது யூனுசை பிப். 27-இல் கைது செய்தனர். இம்முறைகேட்டில் பல கோடி அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ஊழியர்கள் எஸ்.ராஜேஷ், செ.ஜஸ்டின் ராஜேஷ் ஆகிய இருவரை போலீஸார் கடந்த ஏப்.14-இல் கைது செய்தனர்.
அதிகாரிகள் கைது: ஆளுநர் மாளிகை கணக்காளர் சிவக்குமார், உதவிக் கணக்காளர் குப்புசாமி ஆகிய இருவருக்கும் மோசடியில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.