சென்னை: சென்னையில் காதல் தகராறின் காரணமாக பெண் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
திருச்சியினைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் தாற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இங்கு மகளிர் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு சத்யபிரகாஷ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாக அந்தப் பெண் சத்யபிரகாஷிடம் சரியாகப் பேசவில்லையென்றும், வேறு ஒரு நபருடன் பழகத் துவங்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாயன்று அந்தப் பெண்ணை சத்யபிரகாஷ் சந்திக்க விரும்பியுள்ளார். இதற்காக அவரை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பூங்காவுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் விமான நிலையத்தில் தனது பணி முடிந்தவுடன், அங்கு சென்ற பெண் அவருடன் பேசி கொண்டிருந்துள்ளார். திடீரென்று இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பெண் விலகி நடக்கத் துவங்க ஆத்திரமடைந்த சத்யபிரகாஷ் மறைத்த வைத்திருந்த கத்தியினால் அவரை பின்னால் இருந்து தாக்கியுள்ளார். இதில் அந்தப் பெண்ணுக்கு தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தற்பொழுது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சத்யபிரகாக்ஷை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.