திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சிறுமிகள் மாயமானதன் பின்னணியில் பகீர் தகவல்

அறியாத வயதில் சிறார்களுக்கு ஏற்பட்ட காதலால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரும், ஏராளமான பெற்றோரும் தங்களது தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சிறுமிகள் மாயமானதன் பின்னணியில் பகீர் தகவல்
Updated on
2 min read


சென்னை: அறியாத வயதில் சிறார்களுக்கு ஏற்பட்ட காதலால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரும், ஏராளமான பெற்றோரும் தங்களது தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டது.

கடந்த 4 மாதங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 சிறுமிகள் மாயமானதாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே இதற்குக் காரணம்.

இது தொடர்பாக ஊடகங்களில், அதிக அளவில் சிறுமிகள் மாயமானதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பும் ஏற்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் காரணம். அதுதான் காதல்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். சிபி சக்ரவர்த்தி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறியதாவது, இந்த மாவட்டத்தில் சிறுமிகள் மாயமாவது அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். காணாமல் போன சிறுமிகள் 10வது முதல் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவர்களாக உள்ளனர். சுமார் 40 வழக்குகள் பதிவாகின. இதில் 34 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 சிறுமிகள் தங்களது காதலர்களோடு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். காதலர்களில் பலர் படிப்பை பாதியில் விட்டவர்களாகவும், வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தாக்கத்தால் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு சிறுமிகள் ஓடுவது அதிகரித்திருக்கிறது. இவர்களை கண்டுபிடிக்கும் பணியினால் காவல்துறைக்கு மிகப்பெரிய சுமை ஏற்படுகிறது.

மேலும் சக்ரவர்த்தி கூறுகையில், ஒரே ஒரு நாளில் இந்த முடிவை எடுத்து ஒரே ஒரு நாளில் அவர்களுக்கு நிஜம் புரிந்து விடுகிறது. அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பெற்றோருடன் சேர்த்து வைக்கிறோம். பல வழக்குகளில், காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்களுக்கு, தன்னை, காதலனால் பார்த்துக் கொள்ள முடியாது என்பது புரிந்து விடுகிறது. பிறகு அவர்கள் காவல்துறை உதவியை நாடி, பெற்றோருடன் இணைகிறார்கள். இதில் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இவர்கள் வீட்டை விட்டு ஓடியதும் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

இதில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் பகுதிகள் திருவள்ளூர் வருவாய் கோட்டத்தின் கீழ்தான் வருகின்றனவே தவிர, காவல்நிலைய எல்லைக்குள் இல்லை. ஆனால், அந்த பகுதிகளில் காணாமல் போன சிறுமிகளையும் சேர்த்து நூறு சிறுமிகள் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின்றன. 

இளம் சிறார்கள் வீட்டை விட்டு ஓடுவது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், வளர்ந்த நகர்ப்புற இளைஞர், இளைஞிகளை விட, கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கையின் மீதான சரியான புரிதல் இல்லாமல், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வீட்டை விட்டு ஓடும் நிலை அதிகரித்துள்ளது.

சக நண்பர்களுக்கு மத்தியில், காதலிக்கும் இளைஞன் என்ற பெருமையைப் பிடிப்பதற்காக பல இளைஞர்கள் பெண்களை சுற்றி சுற்றி வந்து வலையில் வீழ்த்துகிறார்கள். சில இளைஞர்கள் படிக்காமல், வேலை இல்லாமல், வெறுமனே சிறிய கட்சிகளில் சேர்வது அல்லது ஏதேனும் ஒரு நடிகரின் சங்கத்தில்  இணைவதையே பெரிய கௌரவமாக நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி வீட்டை விட்டு ஓடும் காதலர்கள், நண்பர்களின் உதவியோடு சில நாட்கள் தங்கியிருக்கிறார்கள். பிறகு உண்மை நிலவரம் இருவருக்கும் தெரிந்த பிறகு காவல்நிலையத்தில் சரண் அடைகிறார்கள். இதில் இளைஞன் சிறையில் அடைக்கப்பட, அறிவுரைகள் கூறி பெண்ணை பெற்றோருடன் அனுப்பி விடுகிறார்கள். இருவரது வாழ்வுமே இதில் பாதிக்கப்படுகிறது என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com