

சென்னை: தமிழகக் கலாச்சாரத்தை பறைசாற்றும் மேலும் பல கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்படலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் 'ரிங் கிணறு' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் நடத்தப்பட்ட நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது அளவில் சிறியதாக உள்ள ரிங் வடிவ கிணறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.
இது குறித்து தொல்லியல் துறை இயக்குநர் ஆர். சிவானந்தம் கூறுகையில், இந்த கிணறு 6 உறைகளைக் கொண்டிருக்கிறது. 93 செ.மீ. விட்டம் கொண்டதாகவும் உள்ளது. இதன் அமைப்பைப் பார்க்கும் போது இது ஏதோ ஒரு பொருளை சேமிக்கப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தண்ணீர் அல்லது ஏதேனும் திரவப் பொருளை சேமிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ரிங் கிணறுகளைப் பார்க்கும் போது, இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏன் என்றால், இதேப் பகுதியில் முந்தைய அகழ்வாராய்ச்சிகளின் போது இதே வடிவிலான 2 ரிங் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை இந்தப் பகுதி வாழ்விடமாக இருந்திருந்தால், ரிங் கிணறு, குடிநீரை சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. எனினும் நீண்ட ஆய்வின் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிய முடியும் என்கிறார் மற்றொரு விஞ்ஞானி.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கீழடிப் பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 -ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் (2014-17) நடைபெற்ற அகழாய்வில், தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பாலான போர்க்கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத்தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளாமான தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மூன்றாம் கட்ட அகழாய்வின்போது, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்பு காசுகள், தங்க பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன. ஆனால், முதலில் நடத்தப்பட்ட இரண்டு அகழாய்வுப் பணிகளில் வெளிப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சி கிடைக்காதது, அப்போதைய நிலையில் ஏற்பட்ட அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையினர் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 4 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படவிருந்தது. ஆனால், விவசாயிகள் தங்கள் நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகை வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் தொடங்குவது தாமதமானது. மாவட்ட நிர்வாகத்தின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.