உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் வீட்டுக் கழிவறையுடன் செல்ஃபி எடுத்து சமர்பித்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும் என நீதிபதி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக அம்மாவட்ட நீதிபதி விநோத உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய வீட்டின் கழிவறை முன்பு செல்ஃபி புகைப்படம் எடுத்து அவரவர் வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிபடுத்த வேண்டும். இந்த உத்தரவை மதிக்கத் தவறினால் மே மாத ஊதியம் நிறுத்திவைக்கப்படும்.
மேலும ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற ஆதார சான்றிதழை இதனுடன் இணைத்து வழங்க வேண்டும் என்றிருந்தது.
மாவட்டம் முழுவதும் சுகாதாரத்தை ஏற்படுத்தவும், திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும் மாவட்ட நீதிபதி தரப்பில் இந்த கறார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.