ஞாயிற்றுக்கிழமை காலையில் படையெடுக்கும் கொள்ளை கும்பல்: பெண்களே உஷார்!

சென்னையில் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் படையெடுக்கும் கொள்ளை கும்பல்: பெண்களே உஷார்!
Updated on
1 min read


சென்னையில் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, சென்னையில் நேற்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் அதாவது 2 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 5 பெண்களிடம் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இதே நிலைமைதான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் சுமார் 5க்கும் மேற்பட்ட செயின் பறிப்புகள் நடந்து அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டது.

இந்த ஒரே நாளில் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயின் பறிப்பு கொள்ளையர்களால் சுமார் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுபோல ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அதிகம் செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதால், இவை அனைத்தையும் ஒரே கும்பல் செய்திருக்கலாம் என்று காவல்துறைக்கு ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது.

நேற்று காலை 7 மணிக்கு அண்ணா நகர் மேற்கு பகுதியில் ஜெஸ்ஸி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

7.30 மணியளவில் தி.நகரில் 62 வயதாகும் ஸ்ரீமதியிடம் இருந்து 11.5 சவரன் நகையை பைக்கில் வந்தவர்கள் அறுத்துச் சென்றனர்.

விருகம்பாக்கத்தில் 8.30 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவியின் (61) கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். பைக்கில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு முகத்தில் துணியை கட்டிக் கொண்டு சென்றதாகக் கூறுகிறார்.

காலை 8.45 மணியளவில் அசோக்நகரில் 61 வயது வசுந்தராவிடம் பைக்கில் வந்த செயின் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சிசிடிவி காட்சியை காவல்துறை வெளியிட்டுள்ளது.

வளசரவாக்கத்தில் 67 வயது ஷாந்தகுமாரியிடம் இருந்து 9 சவரன் தாலிச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டது.

செயின் பறிப்பு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் மட்டும் சென்னையில் பல இடங்களில் செயின்பறிப்புச் சம்பவங்கள் நடைபெறுவதால், கொள்ளையர்களுக்கு இந்த நேரம் பல வகைகளில் உகந்ததாக உள்ளது. ஆள் நடமாட்டம் குறைவான நேரம், கடைகள் திறக்காத நேரம், பெண்கள் மட்டும் கடைகளுக்கு வரும் நேரம் என பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
 
எனவே, இந்த நேரத்தில் வெளியே செல்லும் பெண்களும், வயதானவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com