சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, ஆலையின் வாயில் கதவினைப் பூட்டி சீல் வைத்தார்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்தப் போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.