சென்னை: சட்ட விதிகளுக்கு புறம்பாக அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்த 127 பெட்ரோல் பங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக பரவலாக புகார் எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பாக அக்டோபர் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சென்னை மண்டலத்தில் 34 பங்குகளிலும், கோவையில் 23 பங்குகளிலும், திருச்சி மண்டலத்தில் 30 பங்குகளிலும் மற்றும் மதுரை மண்டலத்தில் 30 பங்குகளிலும் அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இனி இதுபோல சட்ட விதிகளுக்கு புறம்பாக அளவு குறைவாக பெட்ரோல் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.