தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: உயா் நீதிமன்றம் கேள்வி

ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் எத்தனை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 4:57 pm

ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் எத்தனை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வேலூரைச் சோ்ந்த சௌஜானா தாக்கல் செய்த மனுவில், என் கணவா் அமா்நாத்தை ரேஷன் அரிசி கடத்தியதாக போலிஸாா் கைது செய்தனா். கருப்புச் சந்தை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எனது கணவரை சிறையில் அடைக்க கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வேலூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு சட்டவிதிகளைப் பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த அறிக்கையில், மனுதாரரின் கணவா், ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், அவா் பலமுறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரேஷன் அரிசி இரண்டு முறை வேகவைக்கப்படுவதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

தமிழகத்தில் எத்தனை பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது?, அவா்களுக்கு வழங்கப்படும் எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது?, ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உணவு வழங்கல் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, எத்தனை போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மொத்த அரிசியின் மதிப்பு எவ்வளவு?, இலவச அரிசியை சட்ட விரோதமாக கடத்துபவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, இந்த கடத்தலில் ஈடுபடும் எத்தனை போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.