சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்கள் எந்தக் காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று தமிழகத் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்

News image

கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Updated On :3 செப்டம்பர் 2018, 8:10 pm


அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்கள் எந்தக் காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று தமிழகத் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில், வேலூர் மண்டித் தெருவில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 
தமிழக அரசியல் வரலாற்றில் 28 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கட்சி அதிமுகவைத் தவிர வேறில்லை. இந்த கட்சியை எம்ஜிஆருக்குப் பிறகு கட்டிக்காத்த ஜெயலலிதா கடந்து வந்த அரசியல் பாதை கரடு முரடானது. இந்தக் கட்சியைக் கைப்பற்றவும், துவம்சம் செய்யவும் யாராலும் முடியாது. 
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரிப் பிரச்னைக்கும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட பிரச்னைக்கும் தனது ஆட்சிக் காலத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காண்டவர் ஜெயலலிதா. அதேசமயம், தமிழக ஆட்சியில் இருந்ததுடன், மத்தியிலும் கூட்டணி வகித்த கருணாநிதியால் இதனை செயல்படுத்த இயலவில்லை. ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களைத்தான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
ஒருபுறம் கட்சி, மறுபுறம் ஆட்சி என இரண்டையும் ஜெயலலிதா உயர்நிலையில் விட்டுச் சென்றுள்ளார். அவர் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு ஜல்லிக்கட்டு, வர்தா புயல், சென்னை மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவை பிரதான பிரச்னைகளாக முன்னிருந்தன. அமைச்சர்கள் துணையுடன் அவற்றுக்குத் தீர்வு கண்டவுடன்தான் சசிகலா, தினகரன் கும்பலின் சதிவலை தொடங்கியது. 
2003-இல் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்தபோதே அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற இந்த கும்பல் திட்டமிட்டது. இதை உளவுத்துறை மூலம் அறிந்ததால்தான் ஜெயலலிதா, அந்த கும்பலை 2008-இல் கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைத்தார். 
அப்படிப்பட்ட தினகரனுக்கு ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கக்கூட எந்தத் தகுதியும் இல்லை. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியிலும், மனநிலை பாதிப்பிலும் பேசுவதாக அவர் கூறுகிறார். அவ்வாறு எனக்கு முதல்வர் பதவியின் மீதான இலக்கு ஏதும் கிடையாது. ஏற்கெனவே ஜெயலலிதாவால் 2 முறை முதல்வராக அமர்த்தப்பட்ட பெருமை எனக்கு உண்டு. அதுவே என் வாழ்நாளுக்கும் போதுமானது. 
அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் அப்படியே உள்ளனர். பணம், பதவி ஆசை உள்ளவர்களும், துரோகம் புரிந்தவர்களும் மட்டுமே தினகரனுடன் உள்ளனர். அவர் ஆர்.கே.நகரைப் போல் டோக்கன் கொடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வென்றுவிட முடியாது. 
2016-இல் இரண்டாம் முறையாக அதிமுக ஆட்சியைக் கொண்டுவர ஜெயலலிதா என்ன பாடுபட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த ஆட்சி கலைந்துவிடக்கூடாது, மீண்டும் அந்த கும்பலின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தர்மயுத்தம் தொடங்கினோம். அதன் அடிப்படையில் தற்போது ஆட்சியும், கட்சியும் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கூறியபடி இந்த கட்சி நூறு ஆண்டுகள் வலுவான இயக்கமாக செயல்படும். 
இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் சிறு இடர்ப்பாடு, சிறு வீழ்ச்சி ஏற்பட்டாலும் அதனை தடுத்து நிறுத்த முதல் தொண்டனாக நான் இருப்பேன். அதிமுகவின் உண்மைத் தொண்டர்களும் உடன் இருப்பார்கள் என்றார் அவர்.
இதில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.