
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆறு மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களது மகளான ஆரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டு, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது.
இந்நிலையில் ஆறு மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நளினி வாபஸ் பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்த்து இந்த முடிவினை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.