மதுரை: திறமை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் கமல்ஹாசன் வியாழக்கிழமை (ஏப். 4) காலை 10.30 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வி.முனியசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, திறமையான, மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளோம். மக்கள் நீதி மய்யம் கட்சி பிரசாரத்துக்காக அதிகம் செலவு செய்யவில்லையே என்று நினைக்கக் கூடாது. செலவு செய்வது நமது ரத்தம், வியர்வை. அதில் எனது வியர்வையும் கலந்திருக்கிறது.
தமிழகத்தில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் இருக்கின்றது மாநில அரசு. அதனால்தான் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஏன் ஏன்றால் எனது இலக்கு தமிழகமே என்று கமல் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மதுரை மக்களவைத் தொகுதியில், மதுரை மாநகர் பகுதிக்கு உள்பட்ட மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் காலை 11 மணிக்கு வேட்பாளர் எம்.அழகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் பகுதியில் நண்பகல் 12 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.சுதாகருக்கு ஆதரவாக வத்தலக்குண்டுவில் மாலை 5 மணிக்கும், திண்டுக்கல்லில் மாலை 6.30 மணிக்கும் பிரசாரம் மேற்கொண்டு, இரவு 8.30 மணிக்கு பழனியில் பிரசாரத்தை கமல்ஹாசன் நிறைவு செய்கிறார்.