
தருமபுரி: ஒகேனக்கல்லில் கரைபுரண்டு ஓடி வரும் காவிரி ஆற்று வெள்ளத்தால் நாகெர்கோவில், நாடார்கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களில் இருப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 2.80 லட்சம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்தது.
இதன் காரணமாக கரையோரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால், ஒகேனக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் இரு கிராம மக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கல் - ஆன்செட்டி இடையேயான சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒகேனக்கல், கடும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பழைய நிலையை அடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெள்ளம் முற்றிலுமாக வடியும் வரை ஒகேனக்கல் அருகே எந்த கடைகளும் அமைக்கப்படக் கூடாது என்று ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.
ஒகேனக்கல் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் காரணமாக ஆலையில் ஏதேனும் சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சுத்திகரிப்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வர முடியாத அளவில் வழியிலேயே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.