தமிழகத்தில் ஊடுருவியுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் முறையான சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
லஷ்கர் அமைப்புடன் தொடர்புடையதாக கேரளாவை சேர்ந்த அப்துல்காதர் உள்ளிட்ட 2 பேர் கைதான நிலையில், அவருடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகம் ஏற்பட்டதால் கோவையில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் விசாரிக்கப்பட்ட 3 பேரும் நிபந்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.