குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தில்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். சுமார் 30 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவிற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தரும் நேரத்தில், மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பட்டமளிப்பு விழா தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.