சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் தலைமை புதிய பொறுப்பு வழங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்த திருநாவுக்கரசர் அந்த பொறுப்பிலிருந்து ஞாயிறு அன்று மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
தில்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்பிய திருநாவுக்கரசர் ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் தலைமை புதிய பொறுப்பு வழங்கியுள்ளது.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு ஒன்றை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தனித்தனியாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.தேர்தல் பரப்புரை, விளம்பரம், ஒருங்கிணைப்பு, செய்தி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கான தலைமை பொறுப்பாளர்கள் இக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதில் தேர்தல் பரப்புரை குழுத் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஈ.வி .கே .எஸ் இளங்கோவனும், விளமபரக் குழுத் தலைவராக கே.வி.தங்கபாலுவும், செய்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பீட்டர் அல்போன்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ப.சிதம்பரம், குமரி ஆனந்தன், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.