அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 காளைகளுக்கு அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் வியாழக்கிழமை (ஜனவரி 17) நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் செய்து வருகின்றனர். பார்வையாளர் மாடம், காளைகள் வெளியேறும் பகுதிகளில் தேங்காய் நார் பரப்புவது, காளைகள் சேகரிப்பு மையம், சுகாதாரத் துறை, கால்நடை மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்படும் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
1,400 காளைகளுக்கு அனுமதி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. ஏற்கெனவே அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்களால் காளைகளுக்கு உடல்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளைப் பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற்றுள்ளனர். மொத்தம் 1,400 காளைகளுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.
வாடிப்பட்டி வட்டாட்சியர் வி.பார்த்திபன் தலைமையில் வருவாய்த் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து அனுமதிச் சீட்டு வழங்கும் பணியில் ஈடுட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு...: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். வாடிவாசல் பகுதி, மருத்துவ முகாம்கள் அமைக்கும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம், பார்வையாளர் மாடம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர்.
புதன்கிழமை நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு 988 காளைகள், 836 மாடிபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







