புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் மாவட்டத்திலேயே முதலாவது ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது . இதில், 450க்கும் மேற்பட்ட காளைகள், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி-1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் நடைபெற்ற மாவட்டத்தின் முதலாவது ஜல்லிக்கட்டுப் போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ நார்த்தாமலை பா.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். போட்டி வழக்கமாக நடைபெறும் ஜனவரி 1-இல் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டதால், திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உடற்தகுதி ஆய்வுக்குப் பின், சுமார் 450 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டதில் சில காளைகள் சீறிப்பாய்ந்து களத்தில் வீரர்களுக்கு போக்கு காட்டி பந்தாடின.
ஜல்லிக்கட்டின்போது, 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தைச் சார்ந்த சுப்பிரமணியன் மகன் வெற்றிவேல் (45), பெருமாள்(41), தச்சங்குறிச்சையைச் சேர்ந்த சுவாமிநாதன்(44) மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை, மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், நகர காவல் துணை கண்காணிப்பாளர் அ.ஆறுமுகம், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








